ராமேஸ்வரம் கோவில் - முன்னோர் வழிபாட்டில் முன்னிலை - Rameshwaram Temple

ராமேஸ்வரம் கோவில் - முன்னோர் வழிபாட்டில் முன்னிலை - Rameshwaram Temple

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நம்முடைய முன்னோர்களை அவர்கள் இறந்த நாளில், நினைவு கூர்ந்து வழிபடுவது ‘பித்ரு வழிபாடு' ஆகும். இறந்துபோன மூதாதையர் தென் திசையில் உறைவதாக ஐதீகம். இதன் பொருட்டே பித்ருக்களை ‘தென்புலத்தார்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மகாளய பட்சம், கிரகண காலங்கள், தமிழ் மாத பிறப்பு, அமாவாசை, பித்ருக்களின் திதி நாட்களில், முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து, படையல் போட்டு வழிபடவேண்டும். அதிலும் மகாளய பட்சத்தில் தம் சந்ததியினரைத் தேடி பித்ருலோகத்தில் இருந்து பித்ருக்கள் பூலோகம் வருவதாகவும், அப்போது சந்ததியினர் கொடுக்கும் படையலைப் பெற்று நேரில் ஆசி வழங்குவதாகவும் ஐதீகம். இதனால் தான் மகாளயபட்ச அமாவாசை சிறப்புக்குரியதாகிறது. எனவே மகாளய பட்ச நாட்களில் வீடுகளை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.


‘மகாளயம்' என்றால் ‘பித்ருக்கள் வாழும் இடம்’ என்று பொருள். ‘பட்சம்' என்றால் ‘பதினைந்து நாட்கள்’ ஆகும். (சில வருடங்களில் பதினான்கு அல்லது பதினாறு நாட்களும் வரலாம். ‘மகாளய பட்சம்’ என்றால் பித்ருக்கள் பூலோகம் வந்து தங்கியிருக்கும் பதினைந்து நாட்கள் எனப்படும்.

புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை மகாளயபட்சம் நீடிக்கும். அந்தப் பதினைந்து நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, காகத்திற்கு நண்பகலில் உணவு படைத்து, ஏழைகளுக்கு அன்னதானமும் செய்திடல் வேண்டும். நிறைவுநாளான மகாளய அமாவாசையன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து நண்பகலில் படையல் படைத்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, அன்று மாலையில் அருகிலுள்ள பழமையான சிவாலயத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

பெரும்பாலும் பித்ரு தோஷத்தால் தான், சரியான காலத்தில் திருமணம் ஆகாமல் போவது, குடும்ப உறவுகளில் சிக்கல், ஜாதக தோஷங்கள், எதிர்பாராத விபத்துகள், வியாபார நஷ்டங்கள், வம்ச விருத்தியின்மை போன்றவை ஏற்படுகின்றன. பித்ரு தர்ப்பணம் செய்வது அனைவரின் கடமை.

பித்ரு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ரு வழிபாடு செய்யவும், பித்ரு சாபங்கள் மற்றும் பித்ரு தோஷங்களை போக்கிக்கொள்ளவும் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, திருமறைக்காடு, பவானி, திருவையாறு, கன்னியாகுமரி, திருக்குற்றாலம், திருவீழிமிழலை, திருவாஞ்சியம், காவிரிப்பூம்பட்டினம், திருப்புவனம், திருவெண்காடு என பல திருத்தலங்கள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானது ராமேஸ்வரம். பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.

தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் விலகுவதற்காக, ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று ராமர் முடிவு செய்தார். அதற்காக ஒரு சிவலிங்கத்தை, காசியில் இருந்து கொண்டுவரும்படி அனுமனிடம் கூறினார். ஆஞ்சநேயர் காசியை நோக்கிப் பறந்தார். ஆனால் அவர் வருவதற்கு தாமதம் ஆகிப்போனது.

குறிப்பிட்ட காலத்திற்குள் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார் ராமபிரான். அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்ட சீதாதேவி, கடற்கரை மணலிலேயே ஒரு அற்புதமான சிவலிங்கத்தை செய்து முடித்தார். அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார், ராமபிரான். இந்த லிங்கமே ராமேஸ்வரம் தலத்தில் ‘ராமலிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. காலம் தாழ்ந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம், ‘விஸ்வ லிங்கம்’ என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இங்கு உள்ள விசாலாட்சி அம்மன் சன்னிதி அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ இருக்கிறது. சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர் இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரைக் கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும்.

கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக்கிறார். ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப்பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். எனவே அவர் ‘பாதாள பைரவர்’ என அழைக்கப்படுகிறார். இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அஷ்டமி, அமாவாசை, மகாளய பட்ச புண்ணிய நாட்களில் பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம், சம்பந்தர் மற்றும் அப்பரால் பாடல் பெற்ற தலமாகும். இத்தல மூலவர் சன்னிதியில் உள்ள படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. ‘ஸ்படிக லிங்க தரிசனம் கோடி பாப விமோசனம்’ என்பர். இந்த ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இத்தல பர்வதவர்த்தினி அம்மனை நவராத்திரி நாட்களில் வழிபடுவது இங்கு சிறப்பாக சொல்லப்படுகிறது. அம்பாள் பீடத்திற்கு கீழ் ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் உள்ளது.

எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடி, அந்த கடல் மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து வழிபட்டால் முற்பிறவி, இப்பிறவி தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.

காசி யாத்திரை செய்பவர்கள் முதலில் இத்தல வழிபாடு செய்து, காசியில் விஸ்வநாதரையும், காசி காலபைரவரையும் வழிபட வேண்டும். பின்னர் கங்கையில் தீர்த்தம் எடுத்து, மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாத சுவாமிக்கு கங்கா அபிஷேகம் செய்து வழிபட்ட பிறகே, காசி யாத்திரை முழுமை பெறும்.

22 தீர்த்தங்கள்

ராமேஸ்வரம் ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்கள் உள்ளன. ஆலயம் எதிரில் உள்ள கடல் தீர்த்தமான அக்னி தீர்த்தத்தில் நீராடி, பின்பு வரிசையாக ஆலயத்தின் உள்ளே உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடவேண்டும். இப்படி செய்தால் ஒருவருடைய பல தலைமுறைகள் செய்த பாவங்கள் அகலும் என்கிறார்கள்.

ஆலயத்தில் உள்ள 22 தீர்த்தங்கள் வருமாறு: மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேது மாதவர் தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சாத்யாமமிர்த தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கோடி தீர்த்தம்.

ராமருக்கு ஏற்பட்ட மூன்று தோஷங்கள்

ராவணனிடம் குணம் தான் கெட்டுப் போய் கீழானதாக இருந்தது. ஆனால் அவனது பலமும், பக்தியும் அனைவரையும் விட உயர்வானதாகவே அமைந்திருந்தது. அந்த அதீத பக்தி அவனிடம் இருந்த காரணத்தினால் தான், ராவணனை வதம் செய்த ராமபிரானுக்கு மூன்று விதமான தோஷங்கள் ஏற்பட்டன. அவையே பிரம்மஹத்தி தோஷம், வீரஹத்தி தோஷம், சாயாஹத்தி தோஷம் என்பன.

ராவணன் அசுரனாக வாழ்ந்தாலும், பிராமண குலத்தில் தோன்றியவன். ஆகையால் தான் அவனைக் கொன்ற ராமருக்கு, ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்துக்கொண்டது. மேலும் ராவணன் மிகச் சிறந்த மாவீரராக அறியப்பட்டவன். கார்த்தவீர்யார்ஜூனன், வாலி ஆகிய இருவரையும் தவிர, தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்டவன்.

ஒரு சிறந்த வீரனைக் கொன்றதால் ராமருக்கு, ‘வீரஹத்தி தோஷம்’ உண்டானது. மூன்றாவதாக, ராவணன் சிறந்த சிவபக்தன். வீணை வாசிப்பதில் வல்லமை படைத்தவன். அதுவும் சாம கானம் பாடுவதற்கு அவனுக்கு நிகராக எவருமில்லை. இதனை ‘சாயை’ என்பார்கள். சாயை என்பது ஒளியை குறிக்கும். ஒளி போன்ற பெருமை வாய்ந்த குணங்களை குறிப்பிடும் ‘சாயை’ பெற்ற ராவணனைக் கொன்றதால், ராமரை ‘சாயாஹத்தி தோஷம்’ பற்றிக்கொண்டது.

சாயாஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமபிரான். அதே போல் வீரஹத்தி தோஷம் விலக, வேதாரண்யம் (திருமறைக்காடு) என்ற திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். விச்ரவஸ் என்ற பிராமண மகரிஷியின் பிள்ளையான ராவணனை சம்ஹாரம் செய்ததால், ராமருக்கு `பிரம்மஹத்தி தோஷம்’ ஏற்பட்டது. இந்த தோஷத்தை அவர் போக்கிக்கொண்ட இடம்தான் ராமேஸ்வரம்.

மதுரையில் இருந்து 152 கிலோமீட்டர் தூரத்தில் ராமேஸ்வரம் அமைந்து உள்ளது.