வைணவ நவக்கிரகங்கள் - Vainava-Navagraha

வைணவ நவக்கிரகங்கள் - Vainava-Navagraha

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வைணவ நவகிரக தலங்களில் சிறப்பான வழிபாடுகளை நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருந்தனர். அந்த வைணவ நவக்கிரகங்கள் விபரம் வருமாறு:-

வைணவ நவக்கிரகங்கள் - Vainava-Navagraha


                     
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
"Master your Skills " with our Research Head
For Appointment  - Whatsapp - 9841986753

நவக்கிரகம்
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு) வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு-கேது ஆகிய 9 கிரகங்களும் நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒன்பது கிரகங்களும் மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரது உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன.

சூரியன் நம் ஆத்மாவை இயக்குகிறது. சந்திரன் நம் மனதை செயல்படுத்துகிறது. செவ்வாயும், ராகுவும் நமக்கு பலம் தருகின்றன. புதன் கிரகத்தால் வாக்கு மேன்மை பெற முடியும். வியாழன் நமக்கு ஞானத்தை அள்ளித் தருகிறது.


ஒருவரது காம இச்சைகளையும், இந்திரியங்களையும் வெள்ளிக் கிரகம் இயக்குகிறது. துக்கம், நரம்புத் தசை மற்றும் மரணத்தை சனி தீர்மானிக்கிறது. ஒருவருக்கு, இந்த கிரகங்களில் ஏதாவது ஒன்றில் தோஷம் ஏற்பட்டால், அந்த கிரகத்துக்குரிய பலன்கள் முழுமையாக கிடைக்காமல் போய் விடும். மேலும் கிரக சுழற்சி காரணமாக கெடுதல்களும் நடக்கும். நல்லதும் நடக்கும். அதற்கு ஏற்ப நமது வாழ்க்கையை அமைதியாகவும், செழிப்பானதாகவும் மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அந்தந்த கிரகங்களை நாடிச் சென்று வழிபட்டு பரிகாரம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். அங்கு வழிபடுவது என்பது பொதுவான பரிகாரமாகத் தான் இருக்கும். எனவே ஒவ்வொரு கிரகமும் தனி சன்னதியில் இருந்து அருளாட்சி செய்யும் கோவில்களுக்கு சென்று பரிகார பூஜை செய்தால் உரிய பலன்களுடன் கூடுதல் பலன்கள் உடனே கிடைக்கும்.

தமிழ்நாட்டில் தஞ்சை மண்டலத்தில் நவக்கிரகங்களுக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன.

தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் வட்டத்தில் திருமங்கலக்குடி அருகே சூரிய பகவானுக்கு சூரியனார் கோவில் உள்ளது. திருவையாறு தாலுகா திங்களூரில் சந்திரகிரகத்துக்கு தனிக்கோவில் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் தனி கோவில் உள்ளது.

புதனுக்கு திருவென் காட்டிலும், வியாழன் (குரு) கிரகத்துக்கு ஆலங்குடி யிலும், சுக்கிரனுக்கு (வெள்ளி) கஞ்சனூரிலும் சனி கிரகத்துக்கு திருநள்ளாறிலும், ராகுவுக்கு திருநாகேசுவரத்திலும், கேது பகவானுக்கு கீழப் பெரும் பள்ளத்திலும் கோவில்கள் அமைந்துள்ளன.

அனைத்து சிவாலங்களிலும், ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நவகிரகங்கள் மேற்கு திசை முகப்பாக அமைந்திருக்கும். நடுவில் இருக்கும் கிரகம் சூரியன். சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரனும், மேற்கில் சனியும், வடக்கில் குரு, தெற்கில் செவ்வாய், வடகிழக்கில் புதன், தென்கிழக்கில் சந்திரன், வடமேற்கில் கேது, தென் மேற்கில் ராகுவும் அமைந்திருப்பர்.

சூரியன் கிழக்கு முகமாக இருப்பார். சந்திரன்-மேற்கு, செவ்வாய்-தெற்கு, புதன்-வடக்கு, குரு-வடக்கு, சுக்கிரன்-கிழக்கு, சனி-மேற்கு, ராகு-தெற்கு, கேது-தெற்கு. இந்த முறையில் அமைந்திருப்பார்கள். ஒவ்வொரு நவக்கிரகமும் தனித்தலத்தில்தான் தன் வாகனத்துடன் காட்சியளிப்பார்கள். சிவாலயங்களில் இருக்கும் நவக்கிரகங்கள் பெரும்பாலும் தன் வாகனத்துடன் காட்சியளிப்பதில்லை.

நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடும்போது சூரியனே போற்றி, சந்திரனே போற்றி, செவ்வாயே போற்றி, புதனே போற்றி, குருவே போற்றி, சுக்கிரனே போற்றி, சனியே போற்றி, ராகு-கேதுவே போற்றி போற்றி என சொல்லிக் கொண்டே வழிபடலாம். இந்த ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ள விதம், அதன் பலம் முதலியவை தான் ஒரு மனிதனின் தலை விதியை தீர்மானிக்கிறது என்று ஜோதிடம் கூறுகிறது.

வைதீக பிரதிஷ்டை, ஆகமப் பிரதிஷ்டை என இரண்டு வடிவங்களில் நவக்கிரகங்களின் வரிசைகளை அமைப்பர். அதற்கேற்ப அனைவரும் பூஜை செய்யலாம். பொதுவாக சிவாலயங்களில் தான் நவக்கிரக தலங்கள் அனைத்தும் இருக்கும் என்பார்கள். ஆனால் வைணவ வழிபாட்டிலும் நவக்கிரக தலங்கள் உள்ளன என்பது நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது. சைவ சமய நவகிரக தலங்கள் சோழ மண்டலத்தில் அமைந்திருப்பது போன்றே வைணவ நவகிரக தலங்களும் சோழ மண்டலத்தில் அமைந்துள்ளன.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வைணவ நவகிரக தலங்களில் சிறப்பான வழிபாடுகளை நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருந்தனர். இடைபட்ட சில நூற்றாண்டுகளில் வைணவ நவகிரக தலங்களின் வழிபாடுகள் வழக்கொழிந்து போய் விட்டன. சமீப ஆண்டுகளாக வைணவ நவகிரக தலங்களில் மீண்டும் உரிய முறைப்படி வழிபாடுகள் தொடங்கியுள்ளன. இதனால் தற்போது தஞ்சை மண்டல வைணவ நவக்கிரக தலங்கள் புகழ் பெற்று வருகின்றன. அந்த வைணவ நவக்கிரகங்கள் விபரம் வருமாறு:-

1. சூரியன்- ஸ்ரீசாரங்கபாணி ஆலயம், கும்பகோணம்.
2. சந்திரன்- ஜெகன்னாதர் ஆலயம், ஸ்ரீநாதன்கோவில்.
3. செவ்வாய்- சீனிவாச பெருமாள் கோவில், நாச்சியார் கோவில் (திருநறையூர்)
4. புதன்- வல்வில் ராமர் ஆலயம் திருபுள்ளம்பூதங்குடி
5. வியாழன்- ஆண்டளக்கும் அய்யன்பெருமாள் ஆலயம், திருஆதனூர்.
6. சுக்கிரன்-கோலவல்வில்ராமர் ஆலயம், திருவெள்ளியங்குடி
7. சனி- ஒப்பிலியப்பன் பெருமாள் ஆலயம், உப்பிலியப்பன் கோவில் (திருவிண்ணகர்)
8. ராகு- கஜேந்திர வரதர் ஆலயம், கபிஸ்தலம்
9. கேது- ஜெகத்ரட்சகன் கோவில், திருக்கூடலூர்
(மாந்தி- திருச்சேறை)

இந்த 9 வைணவத் தலங்களிலும் கிரக அமைப்புக்கு என்று சன்னதி இல்லை. பெருமாளே இங்கு கிரகங்களுக்கு உரிய அம்சங்களுடன் வீற்றிருந்து செயல்படுகிறார்.

இதனால் பெருமாள் கோவில்களில் நவகிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது. அங்கும் நவகிரகங்களை குறித்து பூஜைகள், பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு. சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூஜையிலேயே நவக்கிரங்களும் இடம் பெற்று விடும். வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்.

நவக்கிரகங்கள் அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள் ஆவார்கள். அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூஜையும் வைணவ தலங்களில் உண்டு. ஆனால் வெளிப்படையாக முன்நிறுத்தப்படுவதில்லை. அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் ஆண்டளக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.
அவர் உருவத்திலேயே, இவர்களும் அடங்கி விடுகிறார்கள். அவதாரங்களில் கூட, நவகிரக அம்சங்கள் உண்டு. 108 திவ்ய தேசங்களில் ஒன்பது திவ்யதேசங்கள், நவகிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன. (திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)

எனவே எந்த கிரக தோஷம் உள்ளதோ, அதற்கு ஏற்ப, உரிய தலத்துக்கு சென்று வழிபட்டு பலன் பெறலாம். அதற்கு உதவும் வகையில், தஞ்சை சோழ மண்டலத்தில் உள்ள வைணவ நவகிரகங்கள் பற்றிய தகவல்களை மாலைமலர் திரட்டி தொகுத்து இந்த இலவச புத்தகமாக உங்களுக்கு தந்துள்ளது. படித்து, பலன் பெற்று தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாட மாலைமலர் வாழ்த்துகிறது.