சுவாமிமலை - Swamy Malai : தஞ்சாவூர்


மூலவர் : சுவாமிநாதர், சுப்பையா
உற்சவர் : -
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : நெல்லிமரம்
தீர்த்தம் : வஜ்ர தீர்த்தம்,குமாரதாரை,சரவண தீர்த்தம், நேத்திர குளம்,பிரம்ம தீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவேரகம்
ஊர் : சுவாமிமலை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம தூங்கத் திசைமலை யுவரியு மறுகச லரிபேரி
துன்றச் சிலைமணி கலகல கலினென சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு மயில்வேலா; கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி எந்தைக் குயிரெனு மலைமகள் மரகத கந்தப் பரிமள தனகிரி யுமையருள் இளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே.


-அருணகிரிநாதர்

திருவிழா:

திருக்கார்த்திகை திருவிழா - 10 நாட்கள் - இத்திருவிழாவே இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழா ஆகும். இத்திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். சித்திரை - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் வைகாசி - வைகாசி விசாகப்பெருவிழா ஆவணி - பவித்ரோற்சவம் - 10 நாட்கள் புரட்டாசி - நவராத்திரிபெருவிழா - 10 நாட்கள் ஐப்பசி - கந்தசஷ்டிபெருவிழா - 10 நாட்கள் மார்கழி - திருவாதிரைத் திருநாள் - 10 நாட்கள் தை - பூசப்பெருவிழா பங்குனி - வள்ளி திருக்கல்யாண விழா இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை மாதங்களில் நடைபெறும் விழாக்கள் கொடிஏற்றத்துடன் நடைபெறும் பெருவிழாக்கள் ஆகும். ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில வருடப்பிறப்பு நாளில் திருப்படிதிருவிழா சிறப்பாக நடைபெறுகிறது இவை தவிர கிருத்திகை, மாதப்பிறப்பு,அம்மாவாசை, பவுர்ணமி , சஷ்டி, கார்த்திகை, விசாகம் அன்றும் தமிழ் ,ஆங்கில புத்தாண்டு தீபாவளி பொங்கல் உள்ளிட்ட விசேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

தல சிறப்பு:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும். இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார். கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும். இதிலிருந்து சிவனும் முருகனும்" வேறு வேறு அல்லர் என்பது புலனாகும். மூலவருக்கு எதிரில் இங்கு மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது.இது ஹரிகேசன் என்ற அரக்கனை சுவாமிநாதபெருமானை வணங்கி வென்றதால் இந்திரன் தன் காணிக்கையாக இந்த (ஐராவதம்) யானையை தந்ததாக புராணம் கூறுகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல்11 மணி வரை, மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் சுவாமிமலை - 612302 தஞ்சாவூர் மாவட்டம்.

போன்:

+91- 435- 245 4421

பொது தகவல்:


திருப்படி பூஜை: தஞ்சை மாவட்டத்தில் மலைகளே கிடையாது. மலைகளே இல்லாத இப்பகுதியில் இந்த சுவாமி மலை உள்ளது. குன்று தோறும் இருப்பான் முருகக்கடவுள் என்பதற்கிணங்க இம்மலை மீது முருகப்பெருமான் அருள்புரிவது சிறப்பான ஒன்றாகும். இக்கோயிலின் மேல் தளத்தை அடைய 60 படிக்கட்டுகள் உள்ளன. இவை சபரிமலையில் பதினெட்டு படிகள் எப்படி புனிதமானதாக கருதப்படுகிறதோ அதுபோல் புனிதமாக கருதப்படுகிறது.தமிழ் வருடங்கள் 60 ஆகும். அந்த தமிழ் வருடங்களின் தேவதைகள் சுவாமியை பிரார்த்தனை செய்து படிகளாக உள்ளதாக இங்கு ஐதீகம்.தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது இந்த படிகளுக்கு வஸ்திரம் சாத்தி தேங்காய், பழம் வைத்து பாடல் பாடி பூஜை செய்வார்கள் . இதற்கு திருப்படி பூஜை என்று பெயர். இது இத்தலத்தில் விசேசம்.

பிரார்த்தனை

திருமணவரம் குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். சுவாமி நாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகுகிறது.




நேர்த்திக்கடன்:

மொட்டை போடுதல், சுவாமிக்கு சந்தனகாப்பு , பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம் , அன்னதானம் வழங்குவது , நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடிஎடுத்தல் , அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சத்ரு தொல்லை இருப்பவர்கள் திருசதை அர்ச்சனை செய்கிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதும் நேர்த்திகடனாக இருக்கிறது. வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

தலபெருமை:

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 4வது படைவீடு. அப்பனுக்கே பாடம் சொல்லித் தந்த சுப்பையா அருள்பாலிக்கும் அற்புத தலம் இது. மூலவர் 6 அடி உயரமாக கையில் தண்டத்துடன் தலையில் உச்சிகுடுமியுடனும்,மார்பில் பூணுலுடனும் காணப்படுகிறார். முருகப்பெருமான் சுவாமிநாதனாக வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்ற கோலத்தில் ஆறடி உயரமாக இருக்கிறார். பீடம் சிவ பீடம், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்ற சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற வஜ்ர வேலுடன் காணப்படுகிறார். கையில் தாங்கிய வேல்தான் ஆலயத்தின் கீழ் வீதியில் உள்ள நேத்திர தீர்த்தத்தை உண்டாக்கியது. பூமாதேவி பார்வதியின் சாபத்திற்கு ஆட்பட்டு இத்தலத்திற்கு வந்து தங்கிச் சுவாமிநாதப் பெருமாளை வழிபட்டுச் சாபம் தீர்ந்தாள்.அதன்பின்னும் இத்தலம் விட்டுப்போக விருப்பமின்றி நெல்லி(தலமரம்)மரமாக இத்தலத்தில் இருக்கிறாள். இத்தலம் குறித்து அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் நிறைய பாடியுள்ளனர், நான்முகன், பூமகள், இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம். குருவாக இருந்து அருள் தந்தமையால் குருமலை , குருகிரி என்றும் சுவாமி மலைக்கு வேறுபெயர்கள் உள்ளன.

தல வரலாறு:


படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டினார். கீழே விழுமாறு தம் திருவடி கொண்டு உதைத்து பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார். பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார். சிவபெருமானும் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார். இதை பார்த்து உளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்நிகழ்ச்சி நடந்த தலமே இந்த சுவாமிமலைத் திருத்தலம் என்று தல வரலாறு கூறுகிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார். கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும்.