அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோயில் : சீர்காழி

அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோயில்


மூலவர் : நாகேஸ்வரமுடையார்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : புன்னாகவல்லியம்மன்
  தல விருட்சம் : வேம்பு
  தீர்த்தம் : கழுமலநதி
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : -
  ஊர் : சீர்காழி
  மாவட்டம் : நாகப்பட்டினம்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  மகா சிவராத்திரி
 
தல சிறப்பு:
 
  சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், சனீஸ்வரர் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருப்பது எங்கும் காணக்கிட்டாத அபூர்வம் என்கிறார்கள்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோயில், சீர்காழி, 609 110 நாகப்பட்டினம் மாவட்டம்.
 
போன்:
 
  +91 94437 85862
 
பொது தகவல்:
 
  கருவறையில் இறைவன் நாகேஸ்வரமுடையார், லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்க, அம்பாள் புன்னாகவல்லி தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். கோயிலானது மூன்றுநிலை ராஜகோபுரம், அழகான வேலைப்பாடுகளுடன் மகா மண்டபம், அர்த்தமண்டபம், அதனையடுத்து கருவறை என அமைந்துள்ளது. ராகு, கேதுவுக்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், சனீஸ்வரர் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருப்பது எங்கும் காணக்கிட்டாத அபூர்வம் என்கிறார்கள். தென்திசையில் தட்சிணாமூர்த்தியும், கடவுள் வள்ளி- தெய்வானையுடனும், வடமேற்கு திசையில் சூரியன், விநாயகர், பைரவர், தென்கிழக்கு திசையில் வள்ளியும், வள்ளிக்கு அருளிய விநாயகரும் காட்சி தருகின்றனர். தல விருட்சமான வேம்பின் கீழ் நாகதேவதைகள் வீற்றிருக்கின்றனர்.

 

பிரார்த்தனை
 
  பதினோறாவது வார முடிவில் தோஷ நிவர்த்தி செய்பவர்கள் அன்னதானம் செய்வது உத்தமம். இதனால் ஜனனகால ஜாதகத்தில் ராகுபகவான் பாதகமான இடத்தில் அமைந்ததால் ஏற்படக்கூடிய திருமணத்தடை, களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் முதலிய தோஷங்கள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!


 
நேர்த்திக்கடன்:
 
  அன்றாட ராகுகால வேளையில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரமான மாலை4.30 மணியளவில் இக்கோயிலில் உள்ள விநாயகர், சுவாமி அம்பாள் ஆகியோரை வணங்கியபின், ராகுபகவானின் சன்னதியில் மாக்கோலமிட்டு தோல்நீக்காத முழு உளுந்து பரப்பி, அதன்மீது நெய்தீபம் ஏற்றி, அறுகம்புல் மற்றும் மந்தாரை மலர்களால் பூஜிக்க வேண்டும். அதோடு ராகுபகவானின் சன்னதியை வலமிருந்து இடமாக (அப்பிரதட்சணம்) ஒன்பது முறையும் அடிபிரதட்சணம் செய்து பதினொரு வாரங்கள் வழிபடவேண்டும்.
 
தலபெருமை:
 
  அமிர்தம் உண்டதால் இறவாத்தன்மையும், தேவ மகிமையும் கொண்ட ராகுபகவான் நாகதோஷங்களை நீக்குவது இத்தலத்தின் மகிமை! இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட நந்தவனம் பஞ்சத்தால் வாடிப்போக, அதற்கு நீர் வார்க்கும் பொருட்டு விநாயகர் காக வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த காவிரியை கவிழ்த்துவிட, அந்த நீரானது கழுமல நதியாக பெருகி ஓடியது. மேற்கு திசையில் ஓடும் கழுமல நதிதான் இக்கோயிலின் தீர்த்தம் என்கிறார்கள் புராணம் அறிந்தவர்கள்.

 
 தல வரலாறு:
 
  பாற்கடல் கடையப்பட்டபோது, அதிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தினை உண்பதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போட்டி எழுந்தது. மகாவிஷ்ணு, மோகினி உருவமெடுத்தார். தேவர்கள் மோகினி உருவில் வந்திருப்பது மகாவிஷ்ணு என உணர்ந்துகொண்டனர். ஆனால் அசுரர்களோ மோகினியின் அழகைக் கண்டு மதி மயங்கினார்கள். இந்நிலையில் ஸ்வர்பானு என்ற அசுரன் மட்டும் சற்று சுதாரித்தபடி தானும் தேவ வடிவத்தை எடுத்து சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று அமிர்தத்தை வாங்கி உண்டான். சூரிய, சந்திரர் அதனைச் சுட்டிக்காட்ட, மகாவிஷ்ணு தன் கையிலிருந்த கரண்டியால் அந்த அசுரனின் தலையில் ஓங்கி அடித்தார். அசுரன் ஸ்வர்பானுவின் கழுத்து துண்டிக்கப்பட்டு தலையானது சிரபுரம் என்ற தற்போதைய சீர்காழியிலும், உடலானது சீர்காழி அருகே உள்ள செம்பாம்பின்குடி என்ற செம்மங்குடியிலும் விழுந்தது. ஆனால் அந்த அசுரன் தேவாமிர்தத்தை உண்டு விட்டதால் அவனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக உருவெடுத்தது. இந்த இரு பாம்புகளும் காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு சிவபெருமானை தியானித்து கடுமையாக தவம்புரியத்தொடங்கின. உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது இரண்டு நாகங்களும் தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய, சந்திரர்களை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் வலிமையையும் வழங்கி அருளுமாறு வேண்டினர். ஆனால் சிவபெருமானோ சிரித்தபடி, சூரிய, சந்திரர்கள் உங்களுக்கு பகைவர்கள்தான். ஆனால் அவர்கள் அகில உலகிற்கும் இன்றியமையாதவர்கள். எனவே அமரபட்சம்; அமாவாசை, பவுர்ணமி, கிரஹண நாட்களில் நீங்கள் சூரிய, சந்திரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்றபடி வரம் அளித்தார். உடனே அதே இடத்தில் அசுரத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ராகுவும், பாம்புத்தலையும், அசுர உடலும் கொண்டு கேதுவும் தோன்றினார்கள். அதன்பின்னர் ராகு நாகேஸ்வரமுடையாரை வழிபட்டு கிரக பதவியை அடைந்தார் என்கிறது இத்தலத்தின் வரலாறு.

 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், சனீஸ்வரர் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருப்பது எங்கும் காணக்கிட்டாத அபூர்வம் என்கிறார்கள்.