ஆகாஷ் முத்திரை

ஆகாஷ் முத்திரை!!!
(உயர்ந்த நல்ல எண்ணங்களை வெளிப்படுத்தும் அருமையான முத்திரை)

நமது பெருவிரல் நுனியும் நடு விரல் நுனியும் தொடும்படியும், மற்ற விரல்கள் நேராக நீட்டியும் வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சி காலை/மாலை 2 மணி முதல் 6 மணிக்குள் எந்த நேரத்தில் செய்தாலும் அதிக பலன் தரும்.

இந்த முத்திரை பயிற்சி உடல் உறுப்புகளின் வெற்றிடத்தை அதிகப்படுத்தி நன்றாக இயங்கச்செய்கிறது. அதாவது நமது மண்டையோடு (கபாலம்), மூக்கின் பின்புறம், சைனஸ் பாதை, காது, வாய், தொண்டை மற்றும் வயிறு பாகங்களில் வெற்றிடம் உள்ளது. தேவையான வெற்றிடம் இருப்பதால் அது நன்றாக இயங்குகிறது. அந்த இடத்தில் அதிகமாக தண்ணீரோ அல்லது காற்றோ அடைத்துக்கொண்டால் அந்த உறுப்புகள் இயங்குவதில் பிரச்சனையும் நோயும் வருகிறது. இந்த முத்திரை பயிற்சி தேவையான வெற்றிடத்தை ஏற்படுத்தி நன்றாக இயங்கவைக்கிறது. இந்த முத்திரை நல்ல எண்ணங்களை மனதில் உருவாக்குகின்றது.

இந்த முத்திரையை உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டும். நடந்து கொண்டு செய்யக்கூடாது.

ஆகாஷ் முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:

மனதில் தீய எண்ணங்கள், கெட்ட உணர்ச்சிகள் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.
மனதில் தேவையில்லாமல் ஏற்படும் பயம் கோபம் இவைகளை குறைத்து மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது.
இந்த முத்திரை பயிற்சியில் தியானம் செய்தால் மன ஒருமைப்பாட்டுடன் தியானம் முழுமையாக செயல்படும்.
உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும்.
இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்தால் பொது நிலைப்புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட முன்னோக்கு தெரியும் சக்தி (ESP- EXTRA SENSORY PERCEPTION) கிடைக்கும்.
உடலில் உள்ள தேவையற்ற கெட்ட சக்திகள் (TOXIN) வியர்வை, சிறுநீர், மலம் வழியாக வெளியேறும்.
உடலும் உறுப்புகளும் கனமாக இருப்பது போன்ற நிலைகளை போக்கும்.
சைனஸ் தொந்தரவுகளை குணப்படுத்தும்.
தலைவலி மற்றும் காது வலிகளை குணப்படுத்தும்.
நெஞ்சு கனமாக இருப்பது போன்ற உணர்வுகளை நீக்கும்.
நெஞ்சு படபடப்பை குறைக்கும்.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
அதிகமாக சாப்பிட்டதால் ஏற்படும் தொந்தரவுகளை போக்கும்.
கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும்.
இந்த முத்திரை பயிற்சியால் உடல் உள் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகின்றது.

நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.

நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.