ஸ்ரீ ஸுதர்ஸனாழ்வார்

ஸ்ரீ ஸுதர்ஸனாழ்வார்

ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.
ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் – இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’.
ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.
பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.
ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் – ஆழ்வார் என்ற அடைமொழி.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும், ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர். இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது. இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர். ஸ்ரீ மகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை ஸ்ரீ சுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார். உலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா சுதர்ஸனமே’ என்கின்றனர்.
“புனரபி ஜனனம், -புனரபி மரணம்” (மீண்டும், மீண்டும் பிறந்து மரித்தல்) என்ற உலக நியதியான இயற்கை ஸ்ரீ சுதர்ஸனரை ஆதாரமாகக் கொண்டே நிகழ்கிறது.
இவர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்டார்.
வைணவ ஆலயங்களில் நிகழும் பிரத்மோத்ஸவ விழாவின்போது, தினமும் காலை, மாலையில் ஸ்ரீ சுதர்ஸனர் எழுந்தருளிய பின்பே, பெருமாள் புறப்பாடு (வீதியுலா) நடைபெறும்.
ஜுவாலா கேசமும், திரிநேத்ரமும், பதினாறு கரங்களும், பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால், முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்கள், கெடுதிகள் யாவும் நீங்கும்.
அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும்.
புராணப் பெருமைகள் மிகுந்த, புராதனமான சில திருத்தலங்களில் – மதுரை அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் ஆகியவை மிகுந்த விசேஷமானவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார்.
தென்திசையின் திலகமான திருமாலிருஞ்சோலையை வந்து சேவித்த பீஷ்மாச்சாரியார், ‘சங்க, சக்ர, கதா, கட்கி சார்ங்கதன்வா கதாதர’ என சகஸ்ரநாமத்தில் – கள்ளழகரான விஷ்ணுவைப் போற்றுகிறார். இங்கு பாதுகாப்பு கருதி மாலவனின் திருக்கர சக்கரம், தாயார் சன்னதிக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேறெங்கும் இல்லாத தரிசனமாக ‘பிம்பரூபத்தில்’ மேற்புறம் ‘ஹிரண்ய சம்ஹார நரசிம்மர், கீழ்ப்புறம் ஸ்ரீ வராக ஸ்வாமியாக சிறப்புடன் திகழ்கிறார்.
பக்த வாத்ஸல்யனான இவரை – மனம், வாக்கு, காயம் (உடல்) என ‘திரிகரண சுத்தியுடன் ஸ்ரீ சுதர்ஸனரைப் பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட “நினைத்தது நிறைவேறும்!” சகல சுகங்களும் பெற்றுச் சிறக்கலாம்.
புதனும், சனியும் விசேஷம். முடிந்தால் தினமேயும், இயன்றதை நிவேதனம் செய்து, பூஜித்து, சேவிக்கலாம்.
தினமும், “ஸ்ரீ சுதர்ஸனாய ஹும்பட்” என்ற மந்திரத்தையும், “ஓம் ஸுதர்சனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி, தந்நச் சக்ர ப்ரசோதயாத்,” என்ற ஸ்ரீ சுதர்ஸன காயத்ரீயையும் ஜபிக்கலாம்.
இவ்விதம் வழிபட்டு வரம் பெறலாம். நிச்சயம் நினைத்தது நிறைவேறும்!
ஸ்ரீ சக்ரத்தாழ்வார் தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்கிறார்!
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சிணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். பதினாறு வகைச் செல்வங்களும், கிரக தோஷங்களும் நீங்கும்.
“ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா . . . ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா . . .