சிவராத்திரி அன்று என்ன செய்ய வேண்டும்

சிவராத்திரி

சிவராத்திரி அன்று என்ன செய்ய வேண்டும்
1. உங்கள் வீட்டில் எந்தவிதமான எதிர்மறை சக்திகளை வணங்குபவர்களிடமிருந்து வாங்கிய எந்திரங்கள், தகடுகள், தாயத்துகள், எலுமிச்சை பழம், மை... போன்ற எந்த ஒரு பொருள் இருந்தாலும் அதை எல்லாம் அகற்றி எரித்து விடவும்.
2. அருவி நீர், ஊற்று நீர், கோவில் கிணற்று நீர் போன்ற ஏதாவது புனித தீர்த்தத்தை கொண்டு வீட்டை சுத்தம் செய்து குங்கிலியம், நாய்க்கடுகு, வெண்கடுகு, மருதாணி விதை, மிளகு முதலியவைகளை அரைத்து செய்யப்பட்ட சாம்பிராணி புகை காட்டவும்
.
3. வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து அழகான கோலம் போடவும். வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி கதவு நிலையின் இருபுறமும் வைக்க வேண்டும்.
4. அன்றைய இரவு ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கை சுத்தமான நல்லெண்ணெய், பசுவின் நெய் கொண்டு நிரப்பி, 5 திரிகள் இட்டு அலங்கரித்து வைக்கவும். குத்து விளக்கின் இருபுறமும் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி வைக்க வேண்டும்.
5. குத்து விளக்கின் முன்புறம் ஒரு தலைவாழை இலையில் நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளை படையலாக இடவும். வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். இந்த வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு தடவி வைக்க வேண்டியது கட்டாயம்.
6. இலையில் 2 லட்டுகள் வைக்கவும், ஒரு சொம்பில் மஞ்சள் நீர், ஒரு சொம்பில் பானக்கம், ஒரு சொம்பில் பால், ஒரு சொம்பில் குடிநீர் வைக்கவும்.
7. குளித்துவிட்டு மஞ்சள், சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை வண்ணங்களில் உள்ள உடையை அணிந்து கொள்ளவும். கறுப்பு கூடவேகூடாது. விபூதி, மஞ்சள், குங்குமம், நெற்றியில் முறைப்படி பூசிக்கொள்ள வேண்டும்.
8. பெண்களும் இதுபோல் தயாரான பின்பு கையில் ஆரத்தி தட்டு எடுத்துக் கொண்டு வாசலுக்கு செல்ல வேண்டும். ஆண்கள் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி, வாசலில் வாசலின் வெளிப்புறத்தை நோக்கியவாறு நின்று கொண்டு " எங்களுடைய குலதெய்வமும், ஊர்த் தெய்வங்களும், நாட்டுத் தெய்வங்களும் விண்ணத்தவரும் மண்ணத்தவரும் எங்கள் மீது ஏதேனும் குற்றம் குறை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொண்டு, எழுச்சி பெற்று, செழுச்சி பெற்று, எங்களையும் எங்கள் வம்சாவளிகளையும் காக்க எழுந்தருள்க" என்று சொல்லி பழத்தை பிழிந்து விடவும்.
9. வாசலின் முன் புறத்தில் 3 சூடங்களை ஏற்றி "எல்லோரும் வருக" என்று சொல்லி ஆரத்தி, கற்பூர தீபம் காட்டவும். அப்படியே சூடத்தட்டோடு குத்துவிளக்கின் முன்பாகச் சென்று அமர்ந்து குத்து விளக்கை ஏற்றவும்.
10. உங்களுடைய தாய், தந்தை, குரு முதலியோரை வணங்கி, குடும்ப ஆண்டவர்களையும், குல தெய்வங்களையும், ஊர்த் தெய்வங்களையும், நாட்டுத் தெய்வங்களையும் வணங்கி, உங்களால் உங்கள் முன்னோர்களால் வணங்கப்பட்ட இதர தெய்வங்களையும் வணங்கி கீழ்க்கண்ட குரு வாசகத்தை 24 நிமிடங்கள் மனமுருகச் சொல்லுங்கள்.
ஓம் குரு வாழ்க;
ஓம் குருவே துணை;
ஓம் குருவே எல்லாம்;
ஓம் குருவே அனைத்தும்;
ஓம் குருவே சரணம்.
"ஆத்தாக்களே, தாத்தாக்களே, அம்மை அப்பர்களே, பதினெட்டாம்படிக் கருப்பர்களே, உயிரினங்களே, பயிரினங்களே, நாள், கோள், மீன், ராசிகளே, விண்ணுலகத்தவரே, மண்ணுலகத்தவரே...
(தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனாகிய நான் என்னுடைய சார்பிலும் என் வம்சாவளியின் சார்பிலும் இன்று இந்த சிவராத்திரி பூசையை செய்கிறேன்.
இந்தப் பூசையின் மூலமாக எங்கள் குடும்ப ஆண்டவர்களும், குல தெய்வமும் வலிமை பெற்று, வளம் பெற்று, புத்துயிர் பெற்று, எங்களையும் எங்கள் வம்சாவளியையும் காத்திடச் செய்திடல் வேண்டும்.
தாங்கள் அனைவரும் எங்களுக்கும், எங்கள் வம்சாவளிக்கும் துணையாக இருந்து அனைத்து விதமான அருளுலக பொருளுலக பாதுகாப்புகளையும் செல்வங்களையும் தந்து, காத்து, அருளிட வேண்டும்."
ஓம் குரு வாழ்க;
ஓம் குருவே துணை;
ஓம் குருவே எல்லாம்;
ஓம் குருவே அனைத்தும்;
ஓம் குருவே சரணம்.
11. வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிவபுராணத்தை ஒருவர் சொல்ல மற்றவர்கள் சேர்ந்து சொல்லுங்கள்.
12. பூசையின் முடிவில் வணங்கப்பட்ட தெய்வங்கள் அனைவருக்கும் படைத்து வைத்து இருக்கும் படையலை காணிக்கையாக்கி தூப தீபம் காட்டி பூசையை நிறைவு செய்யவும். அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி சொல்லுங்கள்