மஹா சிவராத்திரி திருஞான சம்பந்தப்பெருமான் அருளிய பஞ்சாட்சரத் திருப்பதிகம் .

மஹா சிவராத்திரி
திருஞான சம்பந்தப்பெருமான்
அருளிய பஞ்சாட்சரத் திருப்பதிகம் .

மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண் - 22.
🌼துஞ்சலுந் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்த வந்தகூற்று
அஞ்சஉ தைத்தன அஞ்செ ழுத்துமே.
🌼உறங்கும் பொழுதிலும் விழித்திருக்கும் பொழுதிலும் ஒருமுகமாக - வஞ்சம் முதலிய தீய குணங்களில் இருந்து நீங்கி - மனம் கசிந்துருகி நாளும் நமசிவாய எனும் திரு ஐந்தெழுத்தை நினைத்து இறைவனைப் போற்றுக!..
🌼தன் உயிரினைப் பறிக்க வந்த - கூற்றுவன் அஞ்சி அலறும்படி உதைத்துக் காத்தருளிய எம்பெருமானின் திருவடிகளை நினைத்து - மார்க்கண்டேயன் போற்றியது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
🌼மந்திரங்களாகவும் , நான்கு மறைகளாகவும் விளங்கி தேவர்களின் சிந்தையில் நின்று அவர்களை ஆட்கொண்டு அருள்வது நமசிவாய எனும் திரு ஐந்தெழுத்தே ஆகும் .
🌼தீமைகளுக்கு செந்தழல் - என, மனதினை வளர்த்து செம்மை நெறியில் நிற்கும் அனைவரும் வேதியர் என - அந்திசந்தி வேளைகளில் தம்நெஞ்சில் தியானிக்கின்ற மந்திரம் - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்து
ஏனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
🌼உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி , ஒண்சுடராகிய ஞானவிளக்கினை ஏற்றி ஐம்புலன்கள் எனும் நன்புலன்களால் மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுபவர்கட்கு ஏற்படும் துன்பங்களைக் கெடுத்து அவர்களைக் காத்து நிற்பன - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼நல்லவர் தீயரெ னாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்லந மன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
🌼நல்லவர் தீயவர் என்ற வேறுபாடு இன்றி விரும்பித் துதிப்பவர்கள் எவரேயாயினும் அவர்களுடைய வினைகளை நீக்கிச் சிவமுத்தி அளிப்பது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼யமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் வேளையில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவன - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼கொங்கலர் மன்மதன் வாளி ஐந்தகத்து
அங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
🌼மன்மதனின் பாணங்கள் தேன் நிறைந்த ஐந்து மலர்கள். நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்பன ஐம்பூதங்கள். மணம் கமழ விளங்கும் பொழில்களும் ஐந்து. நல்லரவின் படமும் ஐந்து. பிறர்க்கு உதவும் கரத்தின் விரல்களும் ஐந்து.
🌼இவ்வாறு ஐவகையாக விளங்குவன அனைத்திற்கும் மேலாக விளங்குவது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
🌼தும்மல் , இருமல் தொடர்ந்த பொழுதும் , கொடிய நரகம் போல துன்பத்தை அனுபவிக்க நேர்ந்த பொழுதும் , முற்பிறப்புக்களில் நாம் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும்,
🌼இடையறாது - ஈசனை சிந்தித்திருந்தால் - மறுபிறவியிலும் நம்முடன் வந்து நமக்குத் துணையாவது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செ ழுத்துமே.
🌼இறப்பு , பிறப்பு இவை நீங்கும்படியாக சிவமந்திரத்தைத் தியானிப்பவர்களின் துன்பங்களை நீக்குவதும், நாள்தோறும் சகல செல்வங்களைக் கொடுப்பதும்,
🌼சீர்மிகும் நடமாடி மகிழும் எம்பெருமானின் - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டையி ராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
🌼வண்டு மொய்க்கும் பூக்களைச் சூடியவளான ஏலவார்குழலி சிந்தித்திருப்பது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼திருக்கயிலாய மாமலையைப் பெயர்த்து எடுக்க முயன்று அதன் கீழேயே சிக்கிக்கொண்ட இராவணன் உயிர் பிழைத்து உய்தல் வேண்டிப் பாடியது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼தம் சிந்தையில் வைத்து வந்தித்தவர்க்கு அண்டங்களையெல்லாம் அள்ளிக் கொடுப்பது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வண மாவன அஞ்செ ழுத்துமே.
🌼திருமாலும் நான்முகனும் காண இயலாத சிறப்புடைய பெருமானின் திருவடிச் சிறப்புகளை நாளும் பேசிக் களிக்கும் பக்தர்களின் ஆர்வமாக விளங்குவது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
அத்திர மாவன அஞ்செ ழுத்துமே.
🌼புத்தர் , சமணர் - வார்த்தைகளைக் கருத்தில் கொள்ளாதவராகி, பொய் இல்லாத சித்தம் கொண்டு தெளிந்து தேறியவர் தம் கருத்தில் விளங்குவது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼ஞானமாகிய திருநீற்றை அணிபவருடைய - வினை எனும் பகை தனை, அழித்தொழிக்கும் கூரிய அம்பாக விளங்குவது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..
🌼நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்ப ராவரே.
🌼நற்றமிழும் நான்மறைகளும் கற்று - ஈசனின் பெருமைகளைத் தியானித்து - சீர்காழி மக்களின் மனதில் உறைபவனாகிய ஞானசம்பந்தன் பாடிய - திருவைந்தெழுத்து மாலை - வாழ்வில் கேடுகள் வாராமல் தடுக்கும்.
🌼திருஐந்தெழுத்து மாலையின் பத்துப் பாடல்களையும்
சிந்தித்திருக்க வல்லவர் வானவர் ஆவர் - என்பது
திருஞான சம்பந்தப்பெருமானின் திருவாக்கு.
🌼திருச்சிற்றம்பலம்.🌼