திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோவில் !
பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்ற ஆறு கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அவை அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன். இவற்றுள் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவது திருச்செந்தூர் ஆகும். இது திருச்சீரலைவாய் எனவும் அழைக்கப்படும். மிக அரிதாக முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில் இதுவாகும். 130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
சூரபத்மன் என்ற அரக்கன் தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று தனக்கு சர்வ வல்லமை வேண்டி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டான்.
சிவபெருமானும் அவனுக்கு காட்சி கொடுத்து, தமது சக்தியன்றி வேறு எந்த சக்தியாலும் அவனுக்கு மரணம் கிடையாது என்று வரம் அருளினார். அதன் பிறகு சூரபத்மனின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போனது. அவனால் துன்பத்திற்கு உள்ளான தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சூரனை அழிக்க சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை உருவாக்கினார். ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. கார்த்திகைப் பெண்கள் அறுவர் குழந்தைகளுக்குப் பாலூட்டினர். அம்மையும், அப்பனும் குழந்தைகளைப் பார்க்க வந்தனர். பார்வதி தேவி அந்த குழந்தைகளைத் திருக்கரங்களால் சேர்த்து அணைத்தாள். அப்போது ஆறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்டு ஒரு குழந்தையாக மாறியது. பார்வதி தேவியின் பாத சிலம்பில் நவசக்திகள் தோன்றினர். நவசக்திகள் வயிற்றில் வீரபாகு முதலிய இலட்சத்து ஒன்பது வீரர்கள் தோன்றினர். இவர்கள் முருகனுக்கு படைவீரர்களாக ஆனார்கள். சிவபெருமான் வெற்றி தரும் வேலை முருகனிடம் தந்தார். தன் அம்சமாகிய பதினொரு ருத்ரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார். அம்மையப்பர் ஆசியுடன் முருகன் படைகளோடு திருச்செந்தூர் வந்து தங்கினார். முருகப் பெருமான் வீரபாகுவைச் சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுவித்திடுமாறு செய்தி அனுப்பினார். சூரபத்மன் அதற்கு மறுத்தார். ஆகவே முருகப் பெருமான் சூரபத்மனோடு போரிட்டார். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயில் சேவலாக மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் என்று முருகன் புகழ் கூவியது.
ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்த 6ம் நாள் முருகன் சூரனை வென்றான். இதுவே கந்த சஷ்டி என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரபதமனின் தளபதிகளான யானைமுகன், சிங்கமுகன், சூரபன்மன் ஆகிய மூன்று அரக்கர்களை ஒழித்தான். இக்காலத்திலும் இம்மூன்று அரக்கர்களும் மாயை, கன்மம், ஆணவம் ஆகிய குணங்களாக மக்களிடம் குடியிருக்கிறார்கள். இவர்களை ஒழிக்கவும் திருச்செந்தூரான் அருள் பாலிக்கிறான். இந்த மூன்று துர்குணங்களையும் விட்டொழித்தால் சூரனைப் போல இறுதியில் இறைவனை அடைய முடியும். இந்த சூரசம்ஹார சம்பவத்தைச் சித்தரிக்கும் வைபவம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெறும். தீராத நோய் நீங்க வேண்டும் என்றும், பிள்ளைப்பேறு வேண்டியும், பல பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இயற்கையை வழிபட்டனர். இயற்கையை முருகு எனப் பெயரிட்டு வணங்கினர். காடு, மலை, அருவி, கடற்கரை ஆகிய இடங்களில் கோவில் அமைத்து வழிபட்டனர். அத்தகைய தலங்களுள் ஒன்று திருச்செந்தூர் ஆகும்.
பதினாறாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் திருவாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்டிருந்த போது, இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. எனினும் தற்போது உள்ள கோவில்களை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காசி சுவாமிகள், மௌன சுவாமிகள் மற்றும் ஆறுமுக சுவாமிகள் என்ற மூவர் சுவாமிகள் ஆவர். இவர்கள் மூவரும் தத்தமது காலங்களில் கோயிலைச் சுற்றி மண்டபங்களையும், கோபுரங்களையும் அமைத்துள்ளனர். இவர்கள் மூவரும் இத்தலத்திலேயே ஜீவசமாதியும் அடைந்துள்ளனர். இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டி காணப்படுகின்றன. இவர்களுக்கு பின்னர் வந்த தேசிக மூர்த்தி சுவாமிகள் ராஜகோபுரத்தை கட்டியதாக கூறப்படுகிறது.
இக்கோவிலில் மூலவர் பெயர் பாலசுப்பிரமணியர். கடற்கரையோரம் நின்று அருள்பாலிப்பதால் 'கடற்கரையாண்டி' என்றும் அழைக்கப்படுகிறார். இக் கோவிலில் மூலவர், வள்ளி, தெய்வானை கோயில்களுக்கு போத்திகளும், ஆறுமுகப் பெருமான், நடராஜர், சனீஸ்வரர் கோயில்களுக்கு சிவாச்சாரியார்களும் பூஜை செய்கின்றனர். வெங்கடாசலப் பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியார்கள் பூஜை செய்கின்றனர். கோயில் திருப்பணி செய்த மூவர் சமாதிகளில் ஓதுவார்கள் பூஜை செய்கின்றனர். மூலவரின் இடது பாதத்தின் அருகே தங்கச் சீபலி வைக்கப்பட்டுள்ளது. வலது பாதத்தருகே வெள்ளியாலான சீபலி உள்ளது. இந்த சீபலி மூலவரைப் போலவே உள்ள ஒரு சிறு விக்ரகம். தினமும் கோயில் பிரகாரங்களில் வலம் வந்து எல்லா சந்நிதிகளுக்கும் சென்று அந்தந்த கடவுளர்களுக்கு முறையாக நிவேதனம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த சீபலிக்கு உண்டாம். தன் கோயிலில் தன்னுடனே உறையும் பிற கடவுளர்களுக்கே படியளக்கும் இந்த பாலகுமரன், தன்னை நாடும் பக்தர்களை அவ்வாறே காத்து அருள்வான் என்பது உறுதி. கேரள மன்னர் மார்த்தாண்டவர்மன் இவற்றை கோவிலுக்கு வழங்கியுள்ளார்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகளின் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி கோயில் திருப்பணியை மேற்கொள்ளும்படி ஆணையிட்டாராம். அதன்படி அவர் இங்கு தங்கி கோபுரம் கட்டி முடித்திருக்கிறார். அவ்வாறு கோபுரம் கட்டியபோது அந்தப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு கூலி கொடுக்க அவரிடம் பணமில்லை. மனதார முருகனை வேண்டிக்கொண்டு, அவர் பிரசாதமான விபூதியை இலையில் மடித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். அந்த இலையை தூண்டுகை விநாயகர் கோயிலை தாண்டி சென்றதும் திறந்து பார்க்குமாறு கூறினார். பணியாளர்களும் அப்படியே பார்த்தபோது அவரவர் வேலைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் தனிதனியே ஊதியம் அந்த விபூதி இலைக்குள் இருந்தது கண்டு அதிசயித்தனர். ஆனால் கோபுரத்தின் ஆறாம் நிலை கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்ட போது இந்த அற்புதம் நின்று விட்டது. சுவாமிகள் மிகவும் வருந்தினார். ஆனால் அன்றிரவே முருகன் அவரது கனவில் தோன்றி காயல்பட்டினத்தில் வசிக்கும் சீதக்காதி என்னும் வள்ளலிடம் சென்று பொருள் பெற்று வருமாறு பணித்தார். ஆனால் வள்ளலோ, சுவாமிகள் கொடை கேட்டவுடனேயே ஒரு மூட்டை உப்பை எடுத்துக் கொடுத்தார். சுவாமிகளுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. பணத்தை எதிர்பார்த்தால் உப்பு கிடைக்கிறதே என்று வருந்தினார். ஆனாலும் எந்த மறுப்பும் சொல்லாமல் உப்பு மூட்டையை வாங்கிச் சென்றார். திருச்செந்தூர் வந்து சுவாமிகள் மூட்டையைத் திறந்து பார்த்தால் அதற்குள் தங்கக் காசுகள் இருந்ததைக் கண்டு வியந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த காசுகளைக் கொண்டு கோபுரத்தைக் கட்டி முடித்தார் சுவாமிகள். கோயிலின் வடபுறத்தில் வள்ளி குகை அமைந்துள்ளது. இங்கு திரிசுதந்திரர்கள் பூஜை செய்கின்றனர். குகைக்குள் உள்ளே நுழையும் வாயில் 4 அடி உயரமே உள்ளது. குனிந்துதான் செல்ல வேண்டும். குகைக்குள் வள்ளியம்மன் சிலை சுவரையொட்டி அமைந்துள்ளது. முருகன் வள்ளியைச் சிறையெடுக்க வந்தபோது வள்ளியின் தந்தை நம்பிராசன் முருகனை துரத்தினான். முருகன், வள்ளியை இக்குகையில் ஒளிந்திருக்கச் சொல்லி பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு போருக்குச் சென்றதாக புராணம் சொல்கிறது. தெய்வயானையை திருமணம் முடித்து வருவதைக் கண்ட முதல் மனைவியான வள்ளி, முருகன் மீது கோபம் கொண்டு இக்குகையில் வந்து ஒளிந்து கொண்டதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது.
இக்கோயிலில் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார் ஆறுமுகப்பெருமாள். ஒரு காலத்தில் கேரளத்தவர்கள் இச்சிலையைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும் பிறகு குமரி மாவட்டம் பறக்கை என்ற ஊரில் இருந்த செட்டியார்கள் அதை மீட்டதாகவும் சொல்கிறார்கள். அவ்வாறு மீட்கப்பட்ட ஆறுமுகப் பெருமானுக்கு அவர்கள் தோசையும், சிறு பருப்பு கஞ்சியும் நிவேதனமாக படைத்திருக்கிறார்கள். அவ்வழக்கப்படி இன்றும் ஆறுமுகப் பெருமானின் உதயமார்த்தாண்ட நைவேத்தியத்தில் தோசையும், கஞ்சியும் தவறாமல் இடம்பெறுகின்றன. கேரள மன்னர்கள் ஆளுகைக்குட்பட்ட காலத்தில் தான் இக்கோவில் பிரபலமடையத் துவங்கியது என்கிறார்கள். ஆகவே, கேரள முறைப்படி இங்கு போத்திகள் மூலஸ்தானத்தில் பூஜை செய்கிறார்கள். அவர்கள் கோயிலுக்குள்ளேயே தங்கி பூஜை காரியங்களில் ஈடுபடுகின்றனர். இக்கோயிலில் இன்றும் பூஜை புனஸ்காரங்கள் கேரள முறைப்படியே நடப்பதால், தரிசனத்திற்கு செல்லும் ஆண்கள் கோயிலுக்குள் சட்டை அணியாமல் தான் செல்ல வேண்டும். கேரளக் கோயில்களில் மேற்கொள்ளப்படும் துலாபார பிரார்த்தனை இங்கும் நடக்கிறது.
இக்கோவிலில் வழங்கப்படும் இலை விபூதி பிரசாதம் வேறெங்கும் கிடைக்காது. பன்னீர் மர இலைகளில் பன்னிரண்டு நரம்புகளுள்ள இலைகளாகத் தேர்ந்தெடுத்து அதனுள் விபூதியை வைத்து மடித்து கட்டு கட்டாக வைத்திருப்பர். நோயால் பாதிக்கப்பட்ட முனிவர் விசுவாமித்திரருக்கு அந்நோய் நீங்க ஆறுமுகப் பெருமான் தம் பன்னிரண்டு கைகளாலும் இலை விபூதியை வழங்கி அவரை முற்றிலும் குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் எந்த நோயினால் பீடிக்கப்பட்டாலும் இந்த இலை விபூதி பிரசாதம் நலமளிக்கும் என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நம்புகிறார்கள். கோயிலில் தினமும் உச்சிக்கால பூஜையின் போது மூலவருக்கு பாலாபிஷேகம் நடக்கும். முன்பு இதற்காக திருச்செந்தூரில் ஒவ்வொரு வீடாகச் சென்று யாசகம் செய்து பாலை கொண்டு வருவார்கள். இதற்கென இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு தலா ஆறு மாதம் பால் யாசிப்பது மட்டுமே வேலை. இப்படி வீடு வீடாக யாசகம் செய்து பாலாபிஷேகம் செய்வதால் இதனை பிச்சைப்பால் அபிஷேகம் என்றே சொல்கிறார்கள். ஆனால் தற்போது பக்தர்கள் தாமே கோயிலுக்கு நேரடியாக பால் கொடுத்து விடுவதால், யாசிக்கும் வழக்கம் இல்லை.
திருச்செந்தூரில் வியப்புக்குரிய ஓர் அம்சம், நாழிக்கிணறு. கடற்கரையை ஒட்டி வெகு அருகில் அமைந்துள்ள சிறிய கிணறு இது. இந்தக் கிணற்றிலிருந்து கிடைக்கும் நீர் உப்பு கரிப்பதில்லை என்பதும், இறைக்க இறைக்க வற்றாமல் நீர் அதே அளவில் சுரப்பதும் விடை காண முடியாத அதிசயமாகும். இது இயற்கை நீரூற்று. இதன் அருகிலேயே உள்ள நீள்சதுர கிணற்றின் நீர் கந்தக நெடியுடன் கல்ங்கிக் காணப்படுவதிலிருந்து நாழிக் கிணற்றின் தெய்வாம்சத்தைப் புரிந்து கொள்ளலாம். கடலில் நீராடிய பக்தர்கள் இந்த நாழிக் கிணற்றில் நீராடி செல்வது வழக்கம். சூரபத்மனை போரில் வென்ற முருகன் தம் படையினரின் தாகம் தணிக்க கடற்கரையில் ஓரிடத்தில் தன் வேலால் குத்தி நீர் வரச் செய்தார். முருகனே உருவாக்கிய பெருமையுடையது இந்த நாழிக்கிணறு என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன், சிறந்த முருக பக்தராகத் திகழ்ந்தார். அவரது காலத்தில் திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரத்தின் ஒன்பதாவது அறையில் உச்சி கால பூஜையின் போது, வெண்கல மணி தினமும் ஒலிக்கப்படும். 100 கிலோ எடை கொண்ட அந்த மணி சப்தம் கேட்டு திருச்செந்தூர் முதல், கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி வரை 40 மண்டபங்களில் அங்குள்ள மணிகளும் அடுத்தடுத்து ஒலிக்கப்படும். கடைசி மண்டப மணி ஒலிக்கப்படும் சப்தம் கேட்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டடயில் கட்டபொம்மன், திருச்செந்தூர் கோவிலில் உச்சி கால பூஜை நடப்பதை அறிந்து கொள்வார். அதன் பின் தான், அவர் பூஜைகளைச் செய்து அன்றைய உணவை அருந்துவார். திருச்செந்தூர் கோவில் உச்சி கால பூஜை பிரசாதம், அவருக்கு குதிரைகள் மூலம் அடுத்த சில மணி நேரத்தில் கோட்டைக்கு வந்து விடுமாம்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த மணியின் செயின் அறுந்ததால், கடந்த பல ஆண்டுகளாக பழுதாகக் கிடந்த அந்த மணியை சரி செய்ய வேண்டுமென கட்டபொம்மன் வாரிசு வீமராஜா மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 250 ஆண்டு பழமையான அந்த மணி தற்போது சரி செய்யப்பட்டு, ராஜகோபுர ஒன்பதாம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.